திருவண்ணாமலையில் நரபலி வதந்தி - வீட்டை இடித்து அதிரடியாக 6 பேரை மீட்ட போலீசார்

ஒரே வீட்டைச் சேர்ந்த 6 பேர் கடந்த 3 நாட்களாக வீட்டை பூட்டிக் கொண்டு மாந்திரீகம் உள்ளிட்ட சடங்குகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
திருவண்ணாமலையில் நரபலி வதந்தி - வீட்டை இடித்து அதிரடியாக 6 பேரை மீட்ட போலீசார்
Published on

திருவண்ணாமலை,

கேரள மாநிலத்தில் அண்மையில் 2 பெண்களை நரபலி என்ற பெயரில் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஒரே வீட்டைச் சேர்ந்த 6 நபர்கள் கடந்த 3 நாட்களாக வீட்டை பூட்டிக் கொண்டு மாந்திரீகம் உள்ளிட்ட சடங்குகளில் ஈடுபட்டு வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. கேரளாவில் அண்மையில் இதே போன்ற சம்பவம் நடைபெற்றதால், இங்கும் நரபலி வதந்தி பரவியது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது. தொடர்ந்து ஜே.சி.பி. வாகனம் மூலம் வீட்டின் முன்பக்கத்தை இடித்து போலீசார் அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்தனர், அங்கு பூஜையில் ஈடுபட்டிருந்த 6 பேரை மீட்டனர்.

அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர்களது குடும்பத்தில் உள்ள ஒரு நபருக்கு பேய் பிடித்திருப்பதாகவும், அதற்காக பூஜை செய்து வந்ததாகவும் கூறியுள்ளனர். தொடர்ந்து அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் தங்கள் கண்காணிப்பின் கீழ் வைத்துள்ளனர். இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com