கள்ளச்சந்தையில் ரேஷன் பொருட்கள் விற்பனை; ஒரு மாதத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

கள்ளச்சந்தையில் ரேஷன் பொருட்களை விற்பனை செய்தது தொடர்பாக ஒரே மாதத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளச்சந்தையில் ரேஷன் பொருட்கள் விற்பனை; ஒரு மாதத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது
Published on

சென்னை,

தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டம், சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது. அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுவோர், உடந்தையாக செயல்படுவோர் மீது, இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்-1955 மற்றும் தொடர்புடைய கட்டுப்பாட்டு ஆணைகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம், 1980-ன் படி அவ்வப்போது தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த 01.05.2024 முதல் 31.05.2024 வரையிலான ஒரு மாத காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற, ரூ.35,30,731/- (ரூபாய் முப்பத்து ஐந்து லட்சத்து முப்பதாயிரத்து எழுநூற்று முப்பத்து ஒன்று மட்டும்) மதிப்புள்ள 3995.67 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி, 126 எரிவாயு உருளைகள், 104 லிட்டர் பொது விநியோகத்திட்ட மண்ணெண்ணெய், 305 கிலோ கோதுமை, 25 கிலோ துவரம்பருப்பு, 24,750 லிட்டர் கலப்பட டீசல் ஆகியவையும், மேற்கண்ட கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 175 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. குற்றச்செயலில் ஈடுபட்ட 1,032 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்புச் சட்டம் 1980-ன் கீழ் 16 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றியமையாப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொது மக்கள் 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்."

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com