

ராமநாதபுரம்,
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக அரசியலில் அடுத்தடுத்த அதிரடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
அந்த வகையில் அதிமுக - பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக இணைந்தது. அதேவேளை, அதிமுக ஒருங்கிணைப்பு என்ற முழக்கத்தை ஓ.பன்னீர் செல்வம் தொடங்கியபோது அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டை டிடிவி தினகரன், சசிகலா எடுத்தனர். ஆனால், சசிகலா முடிவுக்கு எதிராக டிடிவி தினகரன் அதிமுக கூட்டணியில் இணைந்தார்.
அதேவேளை, சசிகலா என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பதில் பரபரப்பு நிலவி வந்தது. மேலும், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளான இன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நலத்திட்ட விழா நடைபெறும் என்று சசிகலா அறித்தார்.
இந்நிலையில், ஜெயலலிதா பிறந்தநாள் நலத்திட்ட விழாவில் சசிகலா இன்று பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய சசிகலா புதிய கட்சியை தொடங்கி உள்ளதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், கட்சி கொடியையும் அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறத்திலான கொடியில் அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ள கட்சிக்கொடியை சசிகலா அறிமுகப்படுத்தினார். மேலும், 9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததுபோல் இனி என்னால் இருக்க முடியாது என்று கூறிய சசிகலா கட்சியின் பெயர் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என்றும் கூறினார்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சசிகலா புதிய கட்சியை தொடங்கிய நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.