சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்திய விவகாரம்; உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் சி.வி.சண்முகம்

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்திய விவகாரம்; உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் சி.வி.சண்முகம்
Published on

சென்னை,

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலா, ஜனவரி 27 அன்று விடுதலை செய்யப்பட்டார். கொரோனா பாதிப்பு சிகிச்சை, பெங்களூரு ரிசார்ட்டில் தனிமைப்படுத்தல் ஆகியவற்றை முடித்துக்கொண்டு நேற்று தமிழகம் திரும்பபினார்.

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு சசிகலா காரில் புறப்பட்டார். அப்போது அந்த காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் ஒசூர் சிப்காட் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில், ஒசூர் மோரணப்பள்ளி பிரத்யேங்கரா தேவி கோயில் ஆகிய கோவில்களுக்குச் சென்று அதிமுக வண்ண துண்டை ஏந்தியப்படி சசிகலா சாமி தரிசனம் செய்தார். பெங்களூருவில் இருந்து சென்னை வரும் பொழுது வழிநெடுகிலும் அவரது ஆதரவாளர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு தெரிவித்தனர்.

இதற்கிடையில் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியது தொடர்பாக அதிமுக அமைச்சர்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து சசிகலா தனது காரில் அதிமுக கொடியுடன் தமிழகம் வந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்தது.

இந்த நிலையில் தமிழக எல்லைக்கு வருவதற்கு முன் தனது காரில் இருந்து இறங்கிய சசிகலா, அதிமுக உறுப்பினர் ஒருவரின் காரில் அக்கட்சியின் கொடியுடன் பயணம் செய்தார். இன்று அதிகாலை 4 மணிக்கு ராமாபுரம் தோட்டத்திற்கு வந்த அவர், எம்.ஜி.ஆர் வாழ்ந்த வீட்டிற்குச் சென்று அவரது சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு அங்கிருந்து புறப்பட்ட சசிகலா தி.நகரில் உள்ள அபிபுல்லா சாலையில் கிருஷ்ணபிரியாவின் இல்லத்திற்கு சென்றடைந்தார்.

இதனையடுத்து அதிமுக அமைச்சர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், சசிகலா தொடர்ந்து அதிமுக கொடியை பயன்படுத்தி வருவது சட்ட விரோதம் என்று குறிப்பிட்டார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com