

சென்னை,
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மதுரை ஐகோர்ட் கிளை தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தது. ஐகோர்ட் உத்தரவின்பேரில் மாஜிஸ்திரேட் விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை விடுவிக்க முயற்சி நடப்பதாக புகார் எழுந்தது. மேலும் அதிகாரிகள் தரப்பில், தந்தை, மகனுக்கு உடல் நலக்குறைவு, மூச்சு திணறலால் உயிரிழந்ததாக மாற்று கருத்துகள் வந்ததாலும் மக்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து வணிகர்கள் சங்கத்தினர், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் வழக்கை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றி விசாரிக்க வலியுறுத்தினர்.
இதற்கிடையே, சேலம் மாவட்டம் தலைவாசலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு விசாரணைக்கு வரும்போது, இதனை தெரிவித்து, அனுமதி பெற்று சி.பி.ஐ.யிடம் இவ்வழக்கு ஒப்படைக்கப்படும் என்றார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, சாத்தான்குளத்தில் தந்தை - மகன் மரணம் அடைந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றம் செய்ய அனுமதி கேட்டு தமிழக அரசு சார்பில் முறையீடு செய்யப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவது தமிழக அரசின் கொள்கை முடிவு. அரசின் கொள்கை முடிவுக்கு நீதிமன்ற அனுமதி தேவையில்லை என்று கருத்துத் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தற்போது இந்த வழக்கு குறித்த விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.