வெளிநாட்டில் முதுகலை கல்வி பயில முஸ்லிம் மாணவர்களுக்கு உதவித் தொகை: கன்னியாகுமரி கலெக்டர் தகவல்


வெளிநாட்டில் முதுகலை கல்வி பயில முஸ்லிம் மாணவர்களுக்கு உதவித் தொகை: கன்னியாகுமரி கலெக்டர் தகவல்
x

வெளிநாட்டில் முதுகலை கல்வி பயில விரும்பும் முஸ்லிம் மாணவ, மாணவிகளுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 31.10.2025 ஆகும்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு 2025-2026-ம் ஆண்டில் முஸ்லீம் சிறுபான்மையின மாணவ/ மாணவியர்களுக்கு உயர்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்க ஏதுவாக வெளிநாடு சென்று படிக்கும் 10 முஸ்லீம் மாணவர்களுக்கு ஒரு மாணவருக்கு தலா ரூ.36 லட்சம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்க ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர்கள் 2025-2026-ம் கல்வியாண்டில் முதுகலை பட்டப்படிப்பு படிக்க உலகளாவிய QS (குவாக்கரெல்லி சைமண்டஸ்) தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்கள்/ நிறுவனங்களிடமிருந்து நிபந்தனையற்ற சேர்க்கை கடிதம் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

பட்டப் படிப்பில் 60 சதவீதம் அல்லது அதற்கு இணையாக தேர்ச்சி சதவீதம் பெற்றிருக்க வேண்டும். பொறியியல், மேலாண்மை, அறிவியல் பயன்பாட்டு அறிவியல், வேளாண்மை அறிவியல், மருத்துவம், சர்வதேச வணிகம், பொருளாதாரம், நிதி கணக்கியல், மனித நேய படிப்புகள், சமூக அறியியல், நுண்கலைகள் மற்றும் சட்டம் போன்ற பாடப்பிரிவுகளை தேர்ந்து எடுத்து முதுகலைப் பட்டப்படிப்புக்கான சேர்க்கை பெற்றவராக இருத்தல் வேண்டும்.

இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க www.bcmbcmw.tn.gov.in/ welfschemes_minorities.htm என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலச மஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 31.10.2025 ஆகும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story