தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் அரசு விடுதிகளைச் சீரமைக்க வேண்டும் - அண்ணாமலை

தமிழகம் முழுவதுமே, ஆதி திராவிடர் நலப் பள்ளிகளும், விடுதிகளும் மிகவும் மோசமான நிலையில்தான் இருக்கின்றன என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே, ஆயக்குடி பகுதியில் உள்ள, ஆதி திராவிட மாணவர் நல விடுதி மேற்கூரை இடிந்து விழுந்து, காலை உணவு அருந்துவதற்காகக் காத்திருந்த ஐந்து மாணவிகளும், விடுதி சமையலர் ஒருவரும் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. அவர்கள் அனைவரும், விரைவில் நலம்பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

விடுதி மேற்கூரை குறித்து, விடுதி ஊழியர்கள் ஏற்கனவே கல்வித் துறைக்குத் தகவல் தெரிவித்திருந்தும், இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிகிறது.

தமிழகம் முழுவதுமே, ஆதி திராவிடர் நலப் பள்ளிகளும், விடுதிகளும் மிகவும் மோசமான நிலையில்தான் இருக்கின்றன. உதட்டளவில் சமூகநீதி பேசி ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் தி.மு.க. தங்கள் வீட்டுக் குழந்தைகள் படிக்கும் பள்ளிக் கட்டிடங்களோ, விடுதிகளோ இது போன்ற மோசமான நிலையில் இருப்பதை அனுமதிப்பார்களா? பள்ளிக் குழந்தைகளிடமும் தி.மு.க. அரசு தீண்டாமை பார்ப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

உடனடியாக, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள், மற்றும் அரசு விடுதிகளைச் சீரமைக்க வேண்டும் என்றும், ஆயக்குடி விடுதியில், காயமடைந்த மாணவியருக்கும், சமையலருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com