சேலத்தில் மேலும் 5 கடைகளுக்கு சீல் வைப்பு

சேலத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த புகாரில் மேலும் 5 கடைகளுக்கு சீல் வைத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சேலத்தில் மேலும் 5 கடைகளுக்கு சீல் வைப்பு
Published on

சேலத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த புகாரில் மேலும் 5 கடைகளுக்கு சீல் வைத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

புகையிலை விற்பனை

சேலம் செவ்வாய்பேட்டை, அன்னதானப்பட்டி, இரும்பாலை ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்தடாக ஒரு வீடு உள்பட 5 கடைகளுக்கு நேற்று முன்தினம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும், போலீசாரும் இணைந்து சீல் வைத்தனர்.

இந்தநிலையில், சேலம் கந்தம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சகாப்புதீன் (வயது 51) என்பவர், தனது பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தொடர்பாக சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சகாப்புதீனை கைது செய்தனர். தொடர்ந்து சூரமங்கலம் சரக உதவி கமிஷனர் நாகராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் ஆகியோர் நேற்று மாலை புகையிலை பொருட்கள் விற்பனை செய்த சகாப்புதீனின் பெட்டிக்கடையை பூட்டி அதிரடியாக சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

5 கடைகளுக்கு சீல் வைப்பு

இதேபோல், சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில் கோபால், பிரேம் ஆகிய 2 பேரும் தாங்கள் நடத்தி வரும் பீடா கடையில் புகையிலை பொருட்கள் விற்றதாக 2 பேரையும் பள்ளப்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நேற்று மாலை கோபால், பிரேம் ஆகிய இருவரின் பீடா கடைகளை இன்ஸ்பெக்டர் ராணி மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆகியோர் சீல் வைத்தனர். மேலும், செவ்வாய்பேட்டை, அன்னதானப்பட்டி ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 2 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளன. சேலம் மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக நேற்று மேலும் 5 கடைகளுக்கு சீல் வைத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

2 பேர் கைது

போலீஸ் உதவி கமிஷனர் அசோகன், அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் தாதகாப்பட்டி பகுதியில் வாகன தணிக்கை நடத்தினர். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த தாதகாப்பட்டியை சேர்ந்த கிஷன்குமார் (வயது 20) என்பவர் வைத்திருந்த பையை சோதனை நடத்திய போது அதில் தடை செய்யப்பட்ட 25 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரிந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர். மேலும் கிஷன்குமார் நடத்தி வரும் மளிகை கடைக்கு சீல் வைத்தனர். அதே போன்று மணியனூர் பகுதியில் பெட்டிக்கடையில் பதுக்கி புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குமார் (40) என்பவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com