வினாடிக்கு 65,700 கனஅடி தண்ணீர் திறப்பு: காவிரி ஆற்றில் வெள்ள அபாயம் - மேட்டூர் அணையை காண சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 65 ஆயிரத்து 700 கனஅடி வீதம் தண்ணீர் திறப்பால், காவிரி ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் 16 கண் மதகு பகுதியில் திறந்து விடப்படும் தண்ணீரை காண மேட்டூர் அணையில் சுற்றுலா பயணிகள் நேற்று குவிந்தனர்.
வினாடிக்கு 65,700 கனஅடி தண்ணீர் திறப்பு: காவிரி ஆற்றில் வெள்ள அபாயம் - மேட்டூர் அணையை காண சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
Published on

மேட்டூர்,

கர்நாடக மாநிலத்தில் 2-வது முறையாக பருவமழை தீவிரம் அடைந்தது. இதனால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து அதிகப்படியான தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைந்தது.

இந்த நீர்வரத்தின் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென்று உயர்ந்து நேற்று முன்தினம் மதியம் அணை 120 அடியை எட்டி நிரம்பியது. இருப்பினும் 5-ந் தேதி இரவு முதலே 16 கண் மதகுகள் வழியாக காவிரி டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் நீர் திறந்து விடப்பட்டது. நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 73 ஆயிரம் கனஅடி நீர்வரத்து இருந்தது. அணை நிரம்பியதை தொடர்ந்து தண்ணீர் திறக்கும் அளவு நீர்வரத்தை பொறுத்து படிப்படியாக உயர்த்தப்பட்டு வந்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு வினாடிக்கு 65 ஆயிரத்து 700 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

இதில் நீர்மின்நிலையங்கள் வழியாக வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி வீதமும், 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி வீதமும், கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 700 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகின்றன. நேற்றும் இதே அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 120.80 அடியாக இருந்தது.

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 65 ஆயிரத்து 700 கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளதால், காவிரி கரையோர மாவட்டங்களான சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அணை நிரம்பிய தகவல் அறிந்ததும் விடுமுறை நாளான நேற்று மேட்டூர் அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஒரு சிலர் அணைக்கட்டு முனியப்பன் கோவிலில் ஆடு, கோழிகளை பலியிட்டும், பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

16 கண் மதகுகளில் இருந்து தண்ணீர் பீறிட்டு வெளியேறும் காட்சியை மேட்டூர் தங்கமாபுரி பட்டணம் புதுப்பாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம், கூட்டமாக நின்று கண்டு ரசித்தனர். மக்கள் கூட்டம் அதிகரித்ததன் காரணமாக அந்த பாலத்தில் போக்குவரத்து ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டது.

சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மேட்டூர் அணை, முனியப்பன் கோவில், பூங்கா, காவிரி பாலம், தங்கமாபுரி பட்டணம் புதுப்பாலம் உள்பட முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து மொத்தம் வினாடிக்கு 73 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இந்தநிலையில், நேற்று திறந்து திறந்துவிடப்படும் நீரின் அளவானது 66 ஆயிரத்து 755 கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com