காவல்நிலையத்தில் சீமான் ஆஜர்: குவிந்த தொண்டர்கள்... பரபரப்பான சூழலில் வளசரவாக்கம்


காவல்நிலையத்தில் சீமான் ஆஜர்: குவிந்த தொண்டர்கள்... பரபரப்பான சூழலில் வளசரவாக்கம்
x
தினத்தந்தி 28 Feb 2025 9:55 PM IST (Updated: 28 Feb 2025 10:28 PM IST)
t-max-icont-min-icon

வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.

சென்னை,

நடிகை விஜயலட்சுமி வழக்கு தொடர்பான விசாரணைக்காக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வடபழனி விடுதியில் இருந்து தனது வழக்கறிஞர்களுடன் வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு வந்துள்ளார். அவருடன் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வந்துள்ளனர். சீமானின் மனைவி அவருடன் வரவில்லை.

இதற்கிடையே, வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் குவிந்துள்ளனர். காவல்நிலையம் முன்பு தொண்டர்கள் குவிந்துள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புக்காக வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு வெளியே தீயணைப்பு வாகனங்களும், ஆம்புலன்சுகளும் நிற்கவைக்கப்பட்டுள்ளன. மேலும், நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், அவர்களை கைது செய்வதற்காக பேருந்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

காவல் நிலையத்துக்கு அருகே தடுப்புகள் போடப்பட்டுள்ளன. சீமானின் கார் செல்ல மட்டுமே போலீசார் அனுமதி வழங்கிய நிலையில், தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று நா.த.க. தொண்டர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இதற்கிடையில், காவல் நிலையத்தில் ஆஜரான சீமானிடம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். அவரிடம் வழக்கு தொடர்பாக சுமார் 53 கேள்விகளை எழுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விசாரணை நள்ளிரவு வரை தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story