

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இயங்கி வரும் பத்திரபதிவுத்துறை அலுவலகத்தில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு இமானுவேல் ஞானசேகர் தலைமையில் 7 பேர் கொண்ட போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையானது நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் 4 மணி நேரம் நடைபெற்றது. பதிவுத்துறை அதிகாரி சந்திரகுமார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 26 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. அலுவலகத்தில் முகூர்த்தநாளான நேற்று முன்தினம் ஒரே நாளில் வெளிமாநிலம், வெளிநாட்டினரை சேர்ந்த 23 பதிவு திருமணங்கள் நடத்தப்பட்ட நிலையில், அலுவலகத்தில் திருமணத்திற்காக அதிக அளவில் லஞ்சம் பெறப்படுவதாக வந்த புகாரின் பேரில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். இது சம்பந்தமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.