உளுந்தூர்பேட்டை அருகே காரில் கடத்திய 300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: 3 பேர் கைது

உளுந்தூர்பேட்டை அருகே காரில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
உளுந்தூர்பேட்டை அருகே காரில் கடத்திய 300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: 3 பேர் கைது
Published on

உளுந்தூர்பேட்டை, 

வாகன சோதனை

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் வழியாக கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதிக்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் காரில் கடத்திவருவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவருடைய உத்தரவின்பேரில் உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் தலைமையிலான போலீசார் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

20 கிலோ மீட்டர் துரத்திய போலீசார்

அப்போது கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட கார் ஒன்று அந்த வழியாக வேகமாக வந்ததை பார்த்த போலீசார், காரை நிறுத்துமாறு ஓட்டுனரிடம் சைகை காட்டினார்கள். ஆனால் போலீசாரை பார்த்ததும் டிரைவர் காரை நிறுத்தாமல் அதிவேகமாக சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் ஓட்டிச் சென்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று, அந்த காரை மடக்கி, சோதனையிட்டனர். அதில் 3 மூட்டைகளில் தலா 100 கிலோ எடையிலான அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

3 பேர் கைது

இதற்கிடையே காரில் வந்த 3 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த ஜெயபாண்டியன் (வயது 43), சிறுபாலன் (27) மற்றும் உளுந்தூர்பேட்டை அடுத்த எம்.எஸ். தர்கா பகுதியை சேர்ந்த சாகுல் அமீது (45) ஆகியோர் என்பதும், 3 பேரும் பெங்களூருவில் இருந்து விருத்தாசலம் பகுதிக்கு 300 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி வந்தபோது, சிக்கிக் கொண்டதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் காரில் கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் புகையிலை கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? எனவும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com