செந்தில் பாலாஜியிடம் 2-வது நாளாக போலீசார் விசாரணை

தவெக எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் பேசிய வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செந்தில் பாலாஜியிடம் 2-வது நாளாக போலீசார் விசாரணை
Published on

சென்னை,

ஆட்சி கவிழ்ப்பு சதி வழக்கு

த.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்காக 15 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க 'மேகாலயா புராஜக்ட்' என்ற பெயரில் அரங்கேறிய மிகப்பெரிய சதித்திட்டம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஊத்தங்கரை த.வெ.க. எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா, சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் அளித்த புகார் அடிப்படையில், திருவல்லிக்கேணி போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இளையராஜா எம்.எல்.ஏ.வுக்கு ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட தாகவும் திடுக்கிடும் தகவல் வெளியானது. இதுவரை இந்த வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக் கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றனர்.

செந்தில் பாலாஜி ஆஜர்

நேற்று முன்தினம் முறைப்படி, சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் ஆஜரானார்கள். முறைப்படி, முன்ஜாமீனை செந்தில்பாலாஜியும், அவரது தம்பி அசோக்குமாரும் பெற்றுக்கொண்டனர். முன்ஜாமீன் நிபந்தனையில் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் தினமும் காலையிலும், மாலையிலும் ஆஜராகி, கையெழுத்திடவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்றும் நிபந்தனையில் கூறப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், செந்தில்பாலாஜியும், அவரது தம்பி அசோக்குமாரும் நேற்று திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர். அவர்கள் இருவரிடமும், திருவல்லிக்கேணி துணை கமிஷனர் ஜெயச்சந்திரன் தலைமையில் கூடுதல் துணை கமிஷனர் குமரகுருபரன், உதவி கமிஷனர் அழகு ஆகியோர் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். வழக்குதொடர்பாக போலீசார் கைப்பற்றியுள்ள ஆவணங்களை காட்டி, 50-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தப்பட்டது.

2-வது நாளாக விசாரணை

இந்த நிலையில், தவெக எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் பேசிய வழக்கில் கையெழுத்திட வந்த செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதர் அசோக்குமார் ஆகிய இருவரிடமும் போலீசார் 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com