18 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது

18 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
18 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது
Published on

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஒரு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் அசோகன்(வயது 38). இவர் பள்ளி அருகே டியூசன் சென்டர் நடத்தி வந்துள்ளார்.

இவர் அந்த பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் 18 மாணவிகளுக்கு வாட்ஸ்-அப்பில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தனது டியூசன் சென்டருக்கு மாணவிகளை வரவழைத்தும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து அந்த மாணவிகள் கடந்த 21-ந்தேதி பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். இந்த புகார் மனுவை நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு தலைமை ஆசிரியர் அனுப்பி வைத்தார்.

இதைத்தொடர்ந்து கரியாப்பட்டினம் போலீசார், சமூக நலத்துறை அதிகாரிகள் ஆகியோர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து பள்ளி மாணவி அளித்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உடற்கல்வி ஆசிரியர் அசோகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com