

மதுரை,
மதுரை மாநகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 23). இவர், பிளஸ்-1 படித்து வரும் ஒரு மாணவியுடன் பழகி உள்ளார். நாளடைவில் அந்த மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதனை வீடியோவாக எடுத்து தனது செல்போனில் வைத்துள்ளார். இதை வைத்து அந்த மாணவியை அடிக்கடி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால் அந்த மாணவி, வீட்டில் மிகுந்த சோகத்துடனும், யாருடனும் சரிவர பேசாமலும் இருந்துள்ளார். வீட்டில் உள்ளவர்கள் மாணவியிடம் தீவிரமாக விசாரித்தபோது, நடந்ததை தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக மாநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து பாலமுருகன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.