தமிழகம் முழுவதும் கடைகள் அடைப்பு முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்

முழு ஊரடங்கால் தமிழகம் முழுவதும் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
தமிழகம் முழுவதும் கடைகள் அடைப்பு முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்
Published on

சென்னை,

கொரோனா 3-வது அலை பரவல் தற்போது மிக தீவிரமாக இருந்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் கொரோனாவின் பிடியில் சிக்குவோரின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்து வருகிறது.

முழு ஊரடங்கு

இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 6-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் அத்தியாவசிய சேவை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. வாகன நடமாட்டமின்றி சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின.

சாலைகள் மூடல்

தலைநகர் சென்னையில் நேற்று முழு ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. முழு ஊரடங்கையொட்டி சென்னையில் நேற்று அனைத்து சாலைகளும் வாகன நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

அண்ணா சாலை, திருவல்லிக்கேணி வாலாஜா சாலை, பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலை, டைடல் பார்க் சாலை, ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை, மெரினா காமராஜர் சாலை, மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலை, கிண்டி சர்தார் படேல் சாலை, அடையாறு எல்.பி. சாலை, ராஜாஜி சாலை உள்பட நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலைகள் மற்றும் இணைப்பு சாலைகள் மூடப்பட்டன. மேம்பாலங்கள் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டன.

கடைகள் அடைப்பு

அதேபோல நகரில் கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டன. இதனால் தியாகராய நகர், வண்ணாரப்பேட்டை, பாரிமுனை, பெரம்பூர், அண்ணாநகர் உள்பட கடைவீதிகள் நிறைந்த பகுதிகள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன. தியாகராயநகர் ரங்கநாதன் தெரு நேற்று ஆள் அரவமின்றி வெறிச்சோடியது. மீன் மார்க்கெட்கள், இறைச்சி கடைகள் எனமக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் நேற்று மூடப்பட்டன. போக்குவரத்து முடக்கப்பட்டதின் காரணமாக பஸ்கள் இயங்கவில்லை. அதேபோல கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

தியேட்டர்கள், ஜிம்கள், சலூன்கள், அழகுசாதன நிலையங்கள், டாஸ்மாக் கடைகள், மால்கள், பெரிய அரங்குகள், கேளிக்கை விடுதிகள், வணிக வளாகங்கள் அனைத்துமே மூடப்பட்டிருந்தன. மருத்துவமனைகள், மருந்தகங்கள், பாலகங்கள், பெட்ரோல் பங்க்குகள் வழக்கம்போல இயங்கின.

போலீசார் கண்காணிப்பு

சாலைகளில் போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சாலையில் தேவையில்லாமல் சுற்றிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் வைத்திருந்தோர், சுப நிகழ்ச்சிகளுக்கு செல்வோர் (பத்திரிகைகளை காண்பித்து) மற்றும் அவசர தேவைகளுக்காக செல்வோரை போலீசார் அனுமதித்தனர். மேலும் வாகனங்களிலும் போலீசார் ரோந்து சென்று சாலைகளில் தேவையில்லாமல் கூட்டம் கூட்டமாக நிற்பவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

அதேபோல மெரினா, பட்டினப்பாக்கம், திருவான்மியூர், பெசன்ட்நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் இல்லாதவாறு போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். சென்னையின் நகர்ப்புறங்கள் போலவே புறநகர் பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனால் ஆட்கள் மற்றும் வாகன நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

பொதுமக்கள் ஒத்துழைப்பு

முழு ஊரடங்கு என்பதால் பொதுமக்கள் நேற்று வீடுகளிலேயே முடங்கினர். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் நடமாட்டத்தை பார்க்க முடிந்தது. அந்தவகையில் ஊரடங்குக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கியதை உணரமுடிந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com