

தென்காசி,
ஆலங்குளத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் கடைகளை வரும் 28-ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேருந்து நிலையத்தை புதுப்பித்து, ரூ.4.35 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. இதற்கான பணிகளை தொடங்க உள்ளூர் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
ஆனால், பேருந்து நிலையத்தில் பல ஆண்டுகளாக கடைகள் நடத்தி வரும் வியாபாரிகள், மாற்று இடம் வழங்காமல் கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த கோர்ட்டு, பொதுநல திட்டமாக புதிய பேருந்து நிலையம் அமைப்பது அவசியம் என்பதால், தற்போது இயங்கி வரும் கடைகளை 28-ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, ஆலங்குளம் பேருந்து நிலையம் தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட உள்ளன.