

தர்மபுரி,
தர்மபுரி அருகே பச்சனம்பட்டியை சேர்ந்தவர் தாமோதரன். கட்டிட மேஸ்திரி. இவரது மகள் பிரதீபா (15 வயது). கடகத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த பிரதீபா தனது தாயாரின் செல்போனை வாங்கி அதில் வீடியோக்களை பார்த்து கொண்டிருந்தார்.
படிக்காமல் ஏன் வீடியோ பார்த்துக் கொண்டிருக்கிறாய்? என்று மாணவியின் தாயார் கேட்டுள்ளார். இதனால் படிக்க போகிறேன் என்று கோபமாக சொல்லிவிட்டு வீட்டில் உள்ள அறைக்குள் பிரதீபா சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து கதவை தட்டிய போது மாணவி கதவை திறக்கவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தபோது பிரதீபா தூக்கில் தொங்கியது தெரிய வந்தது. உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கிய பிரதீபாவை கீழே இறக்கினர். உயிருக்கு போராடிய அவரை உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பிரதீபா பரிதாபமாக உயிரிழந்தார். மாணவி தற்கொலை தொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.