சிவகங்கை: மடப்புரம் கோவில் பகுதியில் மீண்டும் திருட்டு புகார்

இன்று ஒரேநாளில் மட்டும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் 3 பேர் அறநிலையத்துறை அலுவலகத்தில் திருட்டு புகார் அளித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகங்கை: மடப்புரம் கோவில் பகுதியில் மீண்டும் திருட்டு புகார்
Published on

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் விசாரணை கைதி அஜித் குமார் உயிரிழந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திருப்புவனம் குற்றப்பிரிவு போலீசார் பிரபு, ஆனந்தன், கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. சந்தீஷ், சிவகங்கை மாவட்டத்துக்கு கூடுதல் பொறுப்பு வகிப்பார் என தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கைதி உயிரிழந்த சம்பவத்தில் குற்றப்பிரிவு போலீசார் பிரபு, ஆனந்தன், சங்கரமணிகண்டன், ராஜா, கண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு திருப்புவனம் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். கைது செய்யப்பட்ட போலீசாரின் குடும்பத்தினர், திருப்புவனம் காவல் நிலையம் முன் இன்று காலை குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் உயர் அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர். திருப்புவனம் இளைஞர் மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் லாக்அப் மரண வழக்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள சூழலில், திருப்புவனம் கோயிலில் மீண்டும் திருட்டு புகார் எழுந்துள்ளது. கோயில் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பை மற்றும் ஸ்பீக்கர் ஆகியவை  திருடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. திருட்டு புகாரில்தான் இளைஞர் அஜித்குமார் போலீசாரால் தாக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அப்பகுதியில் திருட்டு புகார் வந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் கோயிலுக்கு வந்த பக்தர்கள் மூன்று பேர் அறநிலையத்துறையில் திருட்டு புகார் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com