சின்னசேலம் வழியாகமினி லாரியில் 25 மூட்டை ரேஷன் அரிசி கடத்தல் :2 பேர் கைது

சின்னசேலம் வழியாக மினி லாரியில் 25 மூட்டை ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம் வழியாகமினி லாரியில் 25 மூட்டை ரேஷன் அரிசி கடத்தல் :2 பேர் கைது
Published on

சின்னசேலம், 

சின்னசேலம் பஸ் நிலையம் அருகே சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி, 25 மூட்டைகள் இருந்தது.

இதையடுத்து லாரி டிரைவர் மற்றும் அவருடன் வந்தவரை பிடித்து விசாரித்தனர். அதில் சின்னசேலம் பகுதியில் இருந்து சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதிக்கு ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி செல்வது தெரியவந்தது.

2 பேர் கைது

தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் சேலம் மாவட்டம், தலைவாசல் அடுத்த ஆறகளூர் கிராமம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த ராமசாமி மகன் ராஜா (வயது 40), சின்னசேலம் கடைவீதியை சேர்ந்த சக்கரவர்த்தி மகன் சக்திவேல் (35) என்பது தெரியவந்தது. இதில் ராஜா மினிலாரியை ஓட்டி வந்தார். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி சக்திவேல் உறவினருக்கு சொந்தமானதாகும்.இதையடுத்து ராஜா, சக்திவேல் ஆகியோரை போலீசார் கைது செய்து, தலா 50 எடையுள்ள 25 மூட்டை ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்து, கள்ளக்குறிச்சி உணவு பொருள் கடத்தல் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com