வீட்டிற்குள் புகுந்து நடனமாடிய பாம்புகள் - கிருஷ்ணகிரியில் பரபரப்பு

கிருஷ்ணகிரியில் பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்த பாம்புகள் நடனமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வீட்டிற்குள் புகுந்து நடனமாடிய பாம்புகள் - கிருஷ்ணகிரியில் பரபரப்பு
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி சத்யசாய்நகர் பகுதியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். இவரது வீட்டிற்குள் நேற்று திடீரென 2 சாரை பாம்புகள் புகுந்தன. சிறிது நேரத்தில் 2 சாரை பாம்புகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிக்கொண்டு நடனமாட தொடங்கின. இதை கண்ட சாகுல் ஹமீது குடும்பத்தினர் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடி விட்டனர். பின்னர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் சுமார் 7 அடி நீளம் கொண்ட பாம்புகளில் ஒரு பாம்பை லாவகமாக பிடித்தனர். ஒரு பாம்பு அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. பின்னர் அதே வீட்டு வாசலின் அருகே பதுங்கி இருந்த கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு ஒன்றையும் தீயணைப்புத்துறை வீரர்கள் பிடித்தனர். தொடர்ந்து பிடிபட்ட 2 பாம்புகளையும் அடர்ந்த காட்டு பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.

பொதுவாக காட்டு பகுதியில்தான் பாம்புகள் நடனமாடும் காட்சிகளை நாம் காண முடியும். ஆனால் பொதுமக்கள் குடியிருக்கும் வீட்டிற்குள் புகுந்த பாம்புகள் நடனமாடிய சம்பவம் நேற்று அப்பகுதியில் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com