தென்மேற்கு பருவமழை: மின் விபத்துகளை தடுக்க பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்- மின்வாரியம் தகவல்


தென்மேற்கு பருவமழை: மின் விபத்துகளை தடுக்க பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்- மின்வாரியம் தகவல்
x

இடி, மின்னலின் போது, டி.வி., மிக்ஸி, கிரைண்டர், கணினி, கைபேசி மற்றும் தொலைபேசியை பயன்படுத்தக் கூடாது என்று திருநெல்வேலி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம் சார்ந்த திருநெல்வேலி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட ஒரு சில பகுதிகளில பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. பலத்த காற்று, இடி மின்னல் மற்றும் மழை காரணமாக ஏற்படும் மின் விபத்துகளை தடுக்க பொதுமக்களுக்கு கீழ்க்கண்ட பாதுகாப்பு அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

1. காற்று, மழை மற்றும் இடி, மின்னலின் போது மின் கம்பங்கள், மின்மாற்றிகள், மின்கம்பிகள், மின்பகிர்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம்.

2. மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்வதோ அதனை தொட முயற்சிப்பதோ கூடாது. அது குறித்து அருகிலுள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிப்பதோடு மின் வாரிய அலுவலர்கள் வரும் வரை வேறு யாரேனும் அந்த மின் கம்பிகளை தொடாமல் பார்த்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

3. இடி, மின்னலின் போது திறந்த வெளியிலோ, மரங்களின் அடியிலோ, மின்கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் அடியிலோ தஞ்சம் புகாதீர்கள். கான்கீரிட் கூரையிலான கட்டிடங்களில் தஞ்சமடையுங்கள். பாதுகாப்பான கட்டிடங்கள் இல்லாதபட்சத்தில் தாழ்வான பகுதியில் தஞ்சமடையுங்கள்.

4. இடி, மின்னலின் போது, "டி.வி" மிக்ஸி, கிரைண்டர், கணினி, கைபேசி மற்றும் தொலைபேசியை பயன்படுத்தக் கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்கக்கூடாது.

5. மின்கசிவினால் வீட்டிலுள்ள மின்சாதனங்களை பழுதடையாமல் பாதுகாப்பதற்கு மின்பாதுகாப்பு சாதனமான RCCD (Residual Current Circuit Device) என்ற கருவியை அனைத்து நுகர்வோர்களும் பொருத்தி மின்சாதனங்கள் பழுதடையாமல் பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

6. மின் மாற்றிகள், மின்பகிர்வு பெட்டிகள் மற்றும் மின் கம்பங்கள் அருகே தண்ணீர் தேங்கியிருக்கும் போது அதன் அருகே செல்லக்கூடாது. அது குறித்து அருகிலுள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கவும்.

7. மழையின் போது வீடுகளில் உள்ள சுவர்களில் தண்ணீர் கசிவு இருக்குமாயின் அந்த பகுதியில் மின் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அந்த பகுதியில் மின்சாரம் உபயோகிப்பதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

8. மேல் நிலை மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரிய அலுவலர்களை அணுகவும். பச்சை மரங்கள் மின்சாரத்தை கடத்தும் தன்மை உடையதால் மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரங்களை வெட்டும்பொழுது மரக்கிளைகள் மின் கம்பியில் பட்டு மரம் வெட்டும் நபருக்கு மின் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

9. மின் கம்பத்திற்கு போடப்பட்டுள்ள ஸ்டே வயர்களில் ஆடு, மாடுகளை கட்டுவதோ, மின் கம்பிகளுக்கு அடியில் கால்நடைகளை கிடை அமர்த்துவதோ, மின்கம்பங்களை பந்தல் தூண்களாக பயன்படுத்துவதோ, மின்கம்பங்கள், ஸ்டே வயர்கள் மற்றும் சர்வீஸ் பைப்புகளில் கொடிகள் கட்டி துணிகளை காயப்போடுவதோ கூடாது.

10. விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைப்பது சட்டப்படி குற்றமான செயலாகும், மின்சார வேலி அமைப்பதனால் அதில் சிக்கி அப்பாவி மனிதர்களுக்கும், வனவிலங்குகள் மற்றும் கால்நடைகளுக்கும் உயிரிழப்பு ஏற்படுகிறது. விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைத்தால் சம்பந்தப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர் மீது காவல்துறை மூலம் குற்ற வழக்கு தொடரப்படும்.

11. மின் பாதையின் கீழோ அல்லது அதன் அருகிலோ விளம்பர பதாகைகள் நிறுவாமல் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

12. மின் பாதையின் கீழோ அல்லது அதன் அருகிலோ உயரமாக வளரக்கூடிய மரங்களை வைக்க வேண்டாம்; அதற்கு பதிலாக பூச்செடிகளையோ அல்லது மற்ற தாவர வகைகளை வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

13. பொதுமக்கள் மின்தடை தொடர்பான புகார்களுக்கும் மின் கட்டமைப்புகளில் உள்ள பழுதுகள், இயற்கை இடர்பாடுகளின் போது அவசர உதவிக்கும் மற்றும் மின்விநியோகம் சம்பந்தமான அனைத்து விதமான சேவைகளுக்கும் "மின்னகம்- மின் நுகர்வோர் சேவை மையத்தினை" 94987-94987 என்ற எண்ணிலும், தானியங்கி மின்தடை குறைதீர்க்கும் மையம் 94458-59032, 94458-59033, 94458- 59034 என்ற எண்களிலும் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். பொதுமக்கள் மேற்கூறிய வழிமுறைகளை கடைபிடித்து மின்சார விபத்துக்களை தடுப்பதற்கு மின்வாரியத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story