அமைச்சர் நிர்மல் குமாருக்கு சபாநாயகர் கண்டிப்பு - அவையில் சலசலப்பு

கர்நாடக வனத்துறையின் பதிலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் நிர்மல் குமார் கூறினார்.
அமைச்சர் நிர்மல் குமாருக்கு சபாநாயகர் கண்டிப்பு - அவையில் சலசலப்பு
Published on

யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? என்று அமைச்சர் நிர்மல் குமாரை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கண்டித்தார்.

சென்னை,

கவன ஈர்ப்பு தீர்மானம்

சட்டசபை கூட்டம் தொடங்கியதும் கர்நாடகா வனத்துறையில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் உதயநிதி, அதிமுகவின் இபிஎஸ், பாமகவின் சௌமியா, பாஜக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அந்த தீர்மானத்தின் மீது அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

ஏற்றுக்கொள்ள முடியாது..

இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் பதில் அளித்து பேசியதாவது:-

கர்நாடக வனப்பகுதியில் புலம்பெயர்ந்த தமிழர்கள் வசித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கர்நாடக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. நீதி விசாரணைக்கு கர்நாடக முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார். கர்நாடக வனத்துறையின் பதிலை ஏற்றுக்கொள்ள முடியாது.

முதலில் சுட்டது யார் என விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்திற்கு முதல்-அமைச்சர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நேர்மையான, உயர்மட்ட விசாரணைக்கு முதல்-அமைச்சர் வலியுறுத்தி உள்ளார். உலகம் முழுவதும் உள்ள ஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே நம்பிக்கை முதலமைச்சர் விஜய். தமிழர்களுக்கு எங்கு தீங்கு ஏற்பட்டாலும் முதல் குரல் கொடுப்பவர் முதல்-அமைச்சர் விஜய்தான். என்று பேசினார்.

சபாநாயகர் கண்டிப்பு

தொடர்ந்து அமைச்சர் நிர்மல்குமார் பேசுகையில், ஒரு சில பேருக்கு திடீர் தமிழ் பாசம், தமிழர்கள் மீது பாசம் இருக்கும். அதனை நாம் அனைவரும் வரலாற்றில் பார்த்திருப்போம்; 2009-ம் ஆண்டு நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் பற்றி ஒரு கருத்தை தெரிவித்தார்.

அமைச்சர் நிர்மல் குமாரின் பேச்சுக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே குறுக்கிட்ட சபாநாயகர் அமைச்சர் நிர்மல் குமார் கூறிய தேவையற்ற கருத்துகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். மேலும் அமைச்சர் நிர்மல் குமார் இனி தேவையற்றதை பேச அனுமதிக்கமாட்டேன் என்றும் கவன ஈர்ப்பு தீர்மானத்தை ஒட்டி தான் அனைவரும் பேச வேண்டும் என்றும் யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? என அமைச்சர் நிர்மல்குமாரை சபாநாயகர் கண்டித்தார். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com