

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. ஓட்டு போடுவதற்காக வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை கோயம்பேடு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பஸ் நிலையம், தாம்பரம் அறிஞர் அண்ணா பஸ் நிலையம், தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிலையம், பூந்தமல்லி பஸ் நிலையம், மாதவரம் புறநகர் பஸ் நிலையம், கே.கே.நகர் பஸ் நிலையம் ஆகிய 5 பஸ் நிலையங்களில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்த பஸ்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை), நாளை (திங்கட்கிழமை) ஆகிய 2 நாட்கள் புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இந்த 2 நாட்களும் வெளியூர் செல்லும் பஸ்களை எளிதாக பிடிப்பதற்கு மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து 230 இணைப்பு பஸ்கள், வெளியூர் செல்லும் 5 பஸ் நிலையங்களுக்கும் இயக்கப்படுகின்றன.
கோயம்பேடு- திருவொற்றியூர்
குறிப்பாக கோயம்பேடுக்கு, திருவொற்றியூர், மணலி, மாதவரம், பிராட்வே, அண்ணா சதுக்கம், எம்.கே.பி.நகர், தியாகராயநகர், ஆவடி, திருவான்மியூர், திரு.வி.க.நகர், கேளம்பாக்கம், எண்ணூர், குன்றத்தூர், கண்ணகிநகர், வள்ளலார்நகர், பூந்தமல்லி, பெருங்களத்தூர் ஆகிய இடங்களில் இருந்து 95 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அதேபோல் தாம்பரம் பஸ் நிலையத்துக்கு பிராட்வே, திருவான்மியூர், அடையாறு, வேளச்சேரி, கோவளம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், திருப்போரூர், தியாகராயநகர், சோழிங்கநல்லூர், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் இருந்து 74 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பூந்தமல்லி- தாம்பரம்
பூந்தமல்லி பஸ் நிலையத்துக்கு செங்குன்றம், அம்பத்தூர் எஸ்டேட், தாம்பரம், தியாகராயநகர், பிராட்வே, திருவொற்றியூர், மந்தைவெளி ஆகிய இடங்களில் இருந்து 41 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அதேபோல் எம்.எம்.பி.டி., செங்குன்றம் ஆகிய இடங்களில் இருந்து கோயம்பேடுக்கும், தாம்பரத்தில் இருந்து மாதவரத்துக்கும், கவியரசு கண்ணதாசன் நகரில் இருந்து தாம்பரத்துக்கும், திருவொற்றியூரில் இருந்து செங்குன்றத்துக்கும் 13 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பெசன்ட்நகரில் இருந்து வடபழனிக்கும், கேளம்பாக்கத்தில் இருந்து வடபழனிக்கும் 7 பஸ்கள் உட்பட 230 இணைப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்த தகவல்களை மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.