ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம், அந்தந்த வட்டங்களில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பொது விநியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 2025ம் ஆண்டு, செப்டம்பர் மாதத்திற்கான சிறப்பு முகாம் 13.9.2025, இரண்டாவது சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த வட்டங்களில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.
இந்த முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் சரிசெய்து வழங்கப்பட உள்ளது.
மேலும் மின்னணு குடும்ப அட்டைகளுக்குரிய தவறுகளில் குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் இந்த முகாமில் பொது விநியோகத்திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம். எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில் குறைகள் இருப்பின் மனு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






