மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர் வருவாய்கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 6-ந் தேதி நடக்க உள்ளதாக மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தொவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்
Published on

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து அவரவருக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் குறித்த கோரிக்கை மனுக்களை பெற்று தகுதியான மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்து வருகிறது.

இந்த குறைதீர்க்கும் கூட்டம் கடந்த ஜூன் மாதம் முதல் மாதந்தோறும் வியாழக்கிழமை அன்று திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

கோரிக்கை மனு

அதன்படி வருகிற 6-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் திருவாரூர் கோட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கை மனுக்களை எழுத்து பூர்வமாக கொடுக்கலாம்.

மாற்றுத்திறனாளிகள் வழங்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில், சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் மனுக்கள் வழங்கப்படும்.

விண்ணப்பங்கள் அளிக்கலாம்

மனுதாரர்களின் கோரிக்கைகள் அனைத்தும் அரசின் விதிகளுக்குட்பட்டு பரிசீலிக்கப்படுவதோடு, குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் உள்ள மனுக்களுக்கு உரிய உதவிகள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உதவி உபகரணங்கள், கடனுதவி, பராமரிப்பு உதவிதொகை, வீட்டுமனைபட்டா, பட்டா இருந்தால் தொகுப்பு வீடு, நூறுநாள் வேலை அட்டை, தனியார் துறையில் வேலைவாய்ப்பு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து விண்ணப்பங்கள் அளிக்கலாம்.

யு.டி.ஐ.டி. அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு அட்டை, ஆகியவற்றின் அசல் மற்றும் நகல், தற்போதைய புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.

உதவித்தொகை

ஏற்கனவே விண்ணப்பித்து இருந்தால் அதற்கான ஆதாரங்கள், தொடர்புடைய கடிதங்கள் ஆகியவற்றை கொண்டு வரலாம். இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இதற்குமுன்னர் விண்ணப்பம் அளித்திருந்து அதற்கான ஆதாரம், தொடர்புடைய கடிதங்கள் ஏதுமிருப்பின், அதனையும் தவறாது கொண்டு வர வேண்டும்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாத உதவித்தொகை ரூ.2 ஆயிரம் பெறுபவர்கள் மட்டும் 2023-2024-ம் ஆண்டிற்கு மாற்றுத்திறனாளி நல்லநிலையில் உள்ளார் என கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்ற சான்றிதழையும் மாற்றுத்திறனாளியின் பாதுகாவலர் மட்டும் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்து கொடுக்கலாம். இவ்வாறு அதில் கூறபட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com