

சென்னை,
தமிழகத்திற்கு நியாயமான வரிப்பகிர்வை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று சட்டசபையில் நாளை அரசு தீர்மானம் கொண்டு வருகிறது. தமிழக சட்டசபையில் அரசினர் தனித் தீர்மானத்தை அமைச்சர் மரிய வில்சன் முன்மொழிய உள்ளார். அதன் விவரம் வருமாறு:- மாநிலங்கள் தங்களது பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றுவதற்கு நியாயமான மற்றும் சமமான நிதிப் பகிர்வு முறை இன்றியமையாததாகும். தமிழ்நாடு தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், ஏற்றுமதி, சிறந்த நிதி மேலாண்மை மற்றும் மத்திய அரசால் வசூலிக்கப்படும் வரிகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பு செய்ததன் மூலம், தேசிய பொருளாதாரத்திற்கு தொடர்ந்து முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.
மேலும், மத்திய வரிகளின் பகிர்வு என்பது சமத்துவம், சம உரிமை, நிதி முயற்சி, நல்லாட்சித் திறன் மற்றும் மாநிலங்களின் வளர்ச்சித் தேவைகள் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் அமைய வேண்டும். மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் மனித வள மேம்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள், எந்தவித பாதகமான நிலையிலும் வைக்கப்படக் கூடாது.
இந்த அம்சங்களையெல்லாம் கருத்தில் கொண்டு, மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானத்தை இந்த அவை கொண்டு வந்துள்ளது. அதன்படி, மத்திய அரசுக்கு செலுத்தப்படும் வரிகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நிதிப் பகிர்வை உறுதி செய்ய வேண்டும். மத்திய வரிகளின் பகிர்விற்கான வெளிப்படையான, சமமான நடைமுறையை பின்பற்ற வேண்டும். மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் மனித வள மேம்பாட்டில் மாநிலங்கள் அடைந்துள்ள சாதனைகள் காரணமாக, மத்திய வரிகளின் பகிர்விற்கான அளவுகோல்கள், எந்த மாநிலத்தையும் பாதகமான நிலையில் வைக்காதவாறு அமைக்கப்பட வேண்டும். மாநிலத்தின் நியாயமான நிதி நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சியான தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் விவாதிப்பார்கள். அதன் பின்னர் குரல் வாக்கெடுப்புக்கு தீர்மானம் விடப்படும். அதிக வாக்கு கிடைக்கும்பட்சத்தின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.