விழுப்புரம்- திருவண்ணாமலை இடையே இன்று சிறப்பு ரெயில்கள் இயக்கம்

பவுர்ணமி கிரிவலத்தையொட்டி சிறப்பு ரெயில்கள் இன்று இயக்கப்படுகிறது.
விழுப்புரம்,
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி விழா இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு நடைபெறும் பவுர்ணமி கிரிவல வழிபாட்டில் பக்தர்கள் அதிகளவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்களின் வசதிக்காவும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் தென்னக ரெயில்வே நிர்வாகம் சார்பில் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
அதன்படி விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 10.10 மணிக்கு புறப்படும் விழுப்புரம்- திருவண்ணாமலை முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (வண்டி எண் 06130), காலை 11.45 மணிக்கு திருவண்ணாமலை ரெயில் நிலையத்துக்கு சென்றடையும். அதேபோல் மறுமார்க்கத்தில் பிற்பகல் 12.40 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் திருவண்ணாமலை- விழுப்புரம் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (வண்டி எண் 06129) மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் ரெயில் நிலையம் வந்தடையும்.
இந்த ரெயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்றுசெல்லும். 8 பெட்டிகளை கொண்டதாக இந்த சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். இந்த தகவல் திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






