நடுக்கடலில் 7 மீனவர்களை கட்டையால் தாக்கிய இலங்கை கடற்படையினர்


நடுக்கடலில் 7 மீனவர்களை கட்டையால் தாக்கிய இலங்கை கடற்படையினர்
x

கப்பல் மோதியதால் நாட்டுப்படகின் முன் பகுதியில் பலகை உடைந்து சேதமடைந்து உள்ளதை படத்தில் காணலாம்.

மீனவர்களை இலங்கை கடற்படையினர் கட்டையால் தாக்கிய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் இருந்து இன்னாசி முத்து என்பவருக்கு சொந்தமான நாட்டு படகு ஒன்றில் இன்னாசிமுத்து (வயது 50), ஆரோக்கிய ஹைடன் (23), யெகு (19), ஆல்பர்ட் (19), களஞ்சியம் (25), கென்னடி (60), சேத்தி (60) ஆகிய 7 மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்று இருந்தனர்.

இவர்கள் நேற்று முன்தினம் இரவில் நடுக்கடலில் மீன்பிடித்தனர். அப்போது ரோந்து கப்பலில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் வேகமாக வந்து நாட்டுப்படகின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் படகின் முன்பகுதி பலகை சேதம் அடைந்தது. தொடர்ந்து இலங்கை கடற்படையினர், நாட்டுப்படகில் ஏறி அதில் இருந்த 7 மீனவர்களையும் கட்டையால் சரமாரியாக தாக்கி உள்ளனர். பின்னர் ரோந்து கப்பலில் அங்கிருந்து சென்றுள்ளனர்.

உயிர் தப்பிய 7 மீனவர்களும் படகுடன் நேற்று பாம்பன் வந்தடைந்தனர். சேதமடைந்த நாட்டுப்படகை கரையேற்றினர். இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட 7 மீனவர்களிடமும் மத்திய-மாநில உளவு பிரிவு போலீசாரும், கடலோர போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசைப்படகுகள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வந்த நிலையில் தற்போது நாட்டு படகு மீனவர்களையும் தாக்கி, படகை சேதப்படுத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story