மாநிலங்களவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
மாநிலங்களவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்
Published on

சென்னை,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் மொத்தம் 250 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில், தமிழகத்தை சேர்ந்த 18 பேரும் அடங்குவார்கள். இவர்களில், 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஜூன்) 29-ந் தேதி முடிவடைகிறது.

அதாவது, தி.மு.க.வை சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், அ.தி.மு.க.வை சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், ஏ.நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார் ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைகிறது.

இதேபோல், மேலும் 14 மாநிலங்களை சேர்ந்த 51 உறுப்பினர்களின் பதவிக்காலமும் முடிகிறது. எனவே, மொத்தம் உள்ள 57 இடங்களுக்கும் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 10-ந்தேதி நடக்க இருக்கிறது.

இந்நிலையில் இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. தேர்தல் நடத்தும் அலுவலரான சட்டப்பேரவை செயலர் கி.சீனிவாசன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான ரமேஷ் ஆகியோரிடம் வேட்புமனுக்களை பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

இந்தத் தேர்தலை நடத்தும் அதிகாரியாக, தமிழ்நாடு சட்டசபை செயலாளர் சீனிவாசனையும், உதவித் தேர்தல் அதிகாரியாக, சட்டசபை துணை செயலாளர் ரமேஷையும் இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

எனவே, வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பவர்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரிகள் அறையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

பொது விடுமுறை நாளான 28-ந் தேதி, மற்றும் 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்களை தவிர்த்து, வரும் 31-ந்தேதி மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு பரிசீலனை ஜூன் 1-ந்தேதி நடக்க இருக்கிறது. வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் ஜூன் 3-ந்தேதி ஆகும்.

காலியாக உள்ள 6 இடங்களுக்கு 6 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தால், இந்தத் தேர்தலில் போட்டி இருக்காது. கூடுதலாக மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தால், ஜூன் 10-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, அ.தி.மு.க.வின் பலம் குறைந்து, தி.மு.க.வின் பலம் அதிகரித்துள்ளது. எனவே, தற்போது நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில், அ.தி.மு.க.விடம் உள்ள 3 இடங்களில் ஒன்று தி.மு.க.வின் வசம் செல்கிறது. இதனால், தி.மு.க.வுக்கு 4 இடம் கிடைத்திருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com