

நெல்லை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தென்தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வடதமிழகத்தில் அநேக இடங்களிலும் மழை பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.
இதனிடையே, கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தாமிரபரணி கரையோரங்களில் அமைந்துள்ள கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் வெள்ளம் குறித்து தவறான தகவலை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆற்று நீர் செல்லும் (கடந்த ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளம்) பழைய வீடியோவை வெளியிட்டு தவறான தகவல் பரப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.