

சென்னை,
அரசு பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு பல துறைகள் சார்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் நேரடியாக அவர்களுடைய வங்கி கணக்கில் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில் மாணவர்களின் ஆதார் எண், அவர்களுடைய குடும்ப வருமானம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள், குறிப்பாக மாணவர்களின் சாதி உள்ளிட்ட விவரங்களும் கண்டிப்பாக கேட்டு பெற வேண்டும் எனவும், அந்த விவரங்கள் எல்லாம் சரியாக உள்ளதா என்பதை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதோடு, மாணவர்களின் விவரங்களை கல்வித்துறை இணையதளத்தில பதிவு செய்ய வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதில் ஏதேனும் தவறுகள், குளறுபடிகள் நடந்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்தான் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.