

எண்ணூர்,
சென்னை எண்ணூரை அடுத்த எர்ணாவூர் ஜெய்ஹிந்த் நகர் பசும்பொன் தெருவை சேர்ந்தவர் பாபு. கட்டிடத்தொழிலாளி. இவரது மகள் யாஷினி (வயது 16). இவர், திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இவர்கள் குடியிருந்த பழைய வீட்டை இடித்துவிட்டு புதிதாக வீடு கட்டி வருகிறார்கள். இதனால் அருகில் உள்ள ஓட்டு வீட்டில் ஒரு அறையில் குடும்பத்தோடு தங்கி இருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு யாஷினி தரையில் படுத்து இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பு ஒன்று யாஷினியின் வலது கையில் இருமுறை கடித்துவிட்டது. இதனால் அலறி துடித்த மாணவியை அவரது பெற்றோர் மீட்டு திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை மாணவி யாஷினி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரித்து வருகின்றனர். மாணவி குடும்பத்தினர் தங்கி இருந்த வீட்டின் அருகே புதர் மண்டி காணப்படுகிறது.
அதிலிருந்து வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பு மாணவியை கடித்திருப்பது தெரியவந்தது. இதற்கிடையில் திருவொற்றியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், வீட்டில் பதுங்கி இருந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்து காட்டில் கொண்டுவிட்டனர்.