மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: பள்ளி தாளாளர் உள்பட 5 பேரின் ஜாமீன் மனு விசாரணை 18-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உள்பட 5 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு ஒத்திவைத்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: பள்ளி தாளாளர் உள்பட 5 பேரின் ஜாமீன் மனு விசாரணை 18-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த மாதம் 13-ந் தேதியன்று மர்மமான முறையில் இறந்தார்.

மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

பின்னர் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு தனித்தனியாக விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 28-ந் தேதி மனுதாக்கல் செய்தனர்.

இந்த ஜாமீன் மனுக்கள் கடந்த 2 முறை விசாரணைக்கு வந்தபோது 5 பேருக்கும் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில் நேற்று 3-வது முறையாக அவர்களின் ஜாமீன் மனுக்கள் மகளிர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) சாந்தி முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எதிர்கால கல்வி நலனை கருத்தில் கொண்டு 5 பேருக்கும் ஜாமீன் வழங்கும்படி 2 வக்கீல்கள் வாதிட்டனர். அதற்கு அரசு தரப்பு வக்கீல் சங்கீதா குறுக்கிட்டு இவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை முழுமை பெறாததால் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்திவைக்கும்படி வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சாந்தி, பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு (வியாழக்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com