மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: பள்ளி நிர்வாகிகள் 5 பேரும் ஜாமின் கோரி மனு

மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: பள்ளி நிர்வாகிகள் 5 பேரும் ஜாமின் கோரி மனு
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் பெற்றோர், தங்கள் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி கொடுத்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் கைதான பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்பட 5 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக்கோரி நேற்று முன்தினம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்பட 5 பேரையும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்கும்படி சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இதையடுத்து விழுப்புரம் கோர்ட்டில் இருந்து ரவிக்குமார் உள்பட 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். பின்னர் அவர்களை விழுப்புரம் வண்டிமேட்டில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து வந்து துருவி, துருவி விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி மரணம் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரும் ஜாமீன் கோரி விழுப்புரம் மகிளா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com