கயிறு கட்டி ஆற்றை கடக்கும் மாணவ- மாணவிகள்

ஏரியூர் அருகே பள்ளிமுத்தனூர் பகுதியில் கயிறு கட்டி மாணவ- மாணவிகள் ஆற்றை கடக்கின்றனர். எனவே உயர்மட்ட பாலம் அமைக்கப்படுமா? என்று கிராம மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கயிறு கட்டி ஆற்றை கடக்கும் மாணவ- மாணவிகள்
Published on

ஏரியூர்:-

ஏரியூர் அருகே பள்ளிமுத்தனூர் பகுதியில் கயிறு கட்டி மாணவ- மாணவிகள் ஆற்றை கடக்கின்றனர். எனவே உயர்மட்ட பாலம் அமைக்கப்படுமா? என்று கிராம மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

நாகாவதி ஆறு

ஏரியூரை அடுத்த அரக்காசனஹள்ளி பஞ்சாயத்து பள்ளிமுத்தனூர், பாலிக்காடு, மண்ணப்பன்கொட்டாய் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் 3 புறங்களிலும் நாகாவதி ஆறு செல்கிறது. இந்த கிராமத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்பவர்கள், கோடை காலங்களில் ஆற்றில் தண்ணீர் இல்லாததால் எளிதாக அங்குள்ள பஸ் நிறுத்தத்திற்கு வந்து வெளியூர் செல்கின்றனர்.

மழை காலங்களில் நாகாவதி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது கடந்து செல்ல கிராம மக்கள் கடும் சிரமப்படுகின்றனர். பாலம் எதுவும் இல்லாததால் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

கயிறு கட்டி ஆற்றை கடக்கும் மாணவர்கள்

மேலும் ஆற்றை கடக்க கிராம மக்கள் இருபுறமும் கம்பி நட்டு கயிறு கட்டி உள்ளனர். அந்த கயிற்றை பிடித்து கொண்டு அவர்கள் ஆற்றை கடந்து செல்கின்றனர். அதிலும் மாணவ- மாணவிகள் மாற்று உடையில் வந்து ஆற்றை கடந்த பிறகு பள்ளி சீருடை அணிந்து பள்ளிக்கு செல்கின்றனர்.

இந்த பகுதியில் பாலம் கட்டித்தர வேண்டும் என்று கிராம மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் எந்தவொரு அதிகாரிகளும் கண்டுகொள்வது இல்லை என்கின்றனர் கிராம மக்கள். ஆற்றை கடக்கும் போது தண்ணீர் அதிகம் வந்தால் ஏதாவது விபரீதம் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே இந்த கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஆற்றை கடக்க உயர்மட்ட பாலம் அமைத்து தர போர்க்கால அடிப்படையில்மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com