போதிய பள்ளி கட்டிடம் இல்லாததால் மரத்தடியில் பாடம் படிக்கும் மாணவர்கள்

மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
போதிய பள்ளி கட்டிடம் இல்லாததால் மரத்தடியில் பாடம் படிக்கும் மாணவர்கள்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் வட்டம் வெட்டுவாக்கோட்டை கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் அருகில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளிக்கு போதுமான பள்ளி கட்டிட வசதி இல்லாததால், இந்த பள்ளியில் பயிலும் 4,5,7 ஆகிய வகுப்புகளை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி வளாகத்தின் வெளியே உள்ள மரத்தடியில் அமர்ந்து கல்வி பயின்று வருகின்றனர்.

மழை மற்றும் வெயில் காலங்களில் மரத்தடியில் அமர்ந்து பாடம் படிக்கும் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக பெற்றோர் வேதனைப்படுகின்றனர். இந்த பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே வெட்டுவாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கூடுதல் பள்ளி கட்டிடமும், இந்த பள்ளியில் உள்ள காலி பணியிடங்களுக்கு போதுமான ஆசிரியர்களை நியமித்து சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பெற்றோர் மற்றும் பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com