அரசு கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு..!

விண்ணப்பங்கள் மீண்டும் இணையதளம் வாயிலாக ஜூன் 1-ந்தேதி முதல் பெறப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விஸ்வநாதன்
Published on

சென்னை,

மாணவர்களின் நலன் கருதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவிற்கு விண்ணப்ப பதிவு செய்ய தவறிய மாணவர்களுக்காக விண்ணப்பங்கள் மீண்டும் இணைய தளம் வாயிலாக ஜூன் 1-ந்தேதி முதல் பெறப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் P.விஸ்வநாதன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026-27ம் கல்வி ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 07.05.2026 முதல் பதிவு செய்து வருகின்றனர். 2026-2027ம் கல்வியாண்டில், தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் 1,26,959 ( Shift – I – 1,01,022/ Shift – II – 25,937) சேர்க்கை இடங்கள் உள்ளன. மாணாக்கர்கள் தாங்கள் விருப்பப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விருப்பப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம். இதுவரை 2,24,034 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

மாணாக்கர்களின் நலன் கருதி விண்ணப்ப பதிவு செய்ய தவறிய மாணாக்கர்களுக்காக இரண்டு நாட்கள் இடைவெளியில் www.tngasa.in இணையதளம் வாயிலாக 01.06.2026 முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம். மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டுதல் தொடர்பாக விவரங்களை www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre – AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மாணாக்கர் சேர்க்கை தொடர்பான ஐயங்களுக்கு விளக்கம் பெற கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் செயல்படும் உதவி மையத்தைத் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 044 -24343106 / 24342911 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com