தூத்துக்குடியில் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் அமைக்க மானியம்: கலெக்டர் இளம்பகவத் தகவல்

மொத்த செலவினத் தொகையில் பொதுப்பிரிவினருக்கு 40 சதவீதம் மற்றும் மகளிர்- ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60 சதவீதம் மானியத் தொகையானது பனிக்கட்டி நிலையம் அமைக்கப்பட்ட பின்னர் வழங்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவித்து மீன்வளம் சார்ந்த தொழிலில் அதிக முதலீடு செய்திடும் நோக்கில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் அமைத்திட மானியம் வழங்குகிறது. 50 டன் உற்பத்தி திறன் கொண்ட பனிக்கட்டி நிலையம் அமைப்பதற்கான மொத்த மதிப்பீடு ரூ.150 லட்சம். 30 டன் உற்பத்தி திறன் கொண்ட பனிக்கட்டி நிலையம் அமைப்பதற்கான மொத்த மதிப்பீடு ரூ.120 லட்சம் மற்றும் 20 டன் உற்பத்தி திறன் கொண்ட பனிக்கட்டி நிலையம் அமைப்பதற்கான மொத்த மதிப்பீடு ரூ.80 லட்சம் செலவினத் தொகையில் பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியம் மற்றும் மகளிர்- ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60 சதவீத மானியத் தொகையானது பனிக்கட்டி நிலையம் அமைக்கப்பட்ட பின்னர் வழங்கப்படுகிறது.
மேலும், ஒருங்கிணைந்த வண்ணமீன் வளர்ப்பு அலகு செலவினத்தொகை ரூ.30 லட்சத்தில் பொதுப்பிரிவு மானியத்தொகை 40 சதவீதம் வழங்கப்படுகிறது. எனவே இத்திட்டங்களின் கீழ் பயனடைய விருப்பமுள்ள நபர்கள் உதவி இயக்குநர் அலுவலகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வடக்கு கடற்கரை சாலை, மீன்வளத்துறை வளாகம், தூத்துக்குடி என்ற முகவரியில் வேலை நாட்களில் நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0461- 2320458 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






