எண்ணூரில் இருந்து நிலக்கரி ஏற்றிச்சென்ற சரக்கு ரெயிலில் திடீர் புகை

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இருந்து மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கு 60 பெட்டிகளுடன் நிலக்கரியை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் நள்ளிரவு சரக்கு ரெயில் சென்றது.
எண்ணூரில் இருந்து நிலக்கரி ஏற்றிச்சென்ற சரக்கு ரெயிலில் திடீர் புகை
Published on

அரக்கோணம்,

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இருந்து மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கு 60 பெட்டிகளுடன் நிலக்கரியை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் நள்ளிரவு சரக்கு ரெயில் சென்றது. திருவள்ளூர் - அரக்கோணம் மார்க்கத்தில் திருவள்ளூரை அடுத்த ஏகாட்டூர் ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் வந்தபோது ரெயிலின் கடைசி பெட்டியில் இருந்து திடீரென புகை வந்துள்ளது.

இதைக்கண்ட ரெயில் டிரைவர் உடனே அரக்கோணம் ரெயில்வே அலுவலர்களுக்கும், அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார். உடனே போலீசார், ரெயில்வே ஊழியர்கள் மற்றும் அரக்கோணம் தீயணைப்பு துறையினர் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் தயராக இருந்தனர்.

அதிகாலை 3.30 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்துக்கு வந்தடைந்ததும், புகை வந்த சரக்கு ரெயிலின் கடைசி பெட்டியை ரெயில்வே ஊழியர்கள் தனியாக பிரித்து 6-வது பிளாட்பாரத்தில் நிறுத்தினர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து புகையை அணைத்தனர். பின்னர், காலை 5.15 மணிக்கு சரக்கு ரெயில் புறப்பட்டு மேட்டூர் நோக்கி சென்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com