

திருநெல்வேலி.
திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் வரும் நாட்களில் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக வானிலை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அவசியத் தேவை தவிர்த்து வெளியில் செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. போதிய அளவில் குடிநீர், வியர்வை இழப்பிற்கு ஏற்ற வகையில் ORS கரைசல் பருக அறிவுறுத்தப்படுகிறது.
பொதுமக்கள் பகல் நேரத்தில் பயணம் செய்ய நேரிட்டால் குடிதண்ணீர் எடுத்து செல்வதுடன், கண்ணாடி மற்றும் காலணி அணிந்து கைத்துண்டு, குடை மற்றும் தொப்பியுடன் பாதுகாப்பாக செல்ல வேண்டும். வீட்டிலேயே தயாரித்த உப்பு சர்க்கரை கரைசல், நீர்மோர், எலுமிச்சை சாறு போன்ற பானங்களை அருந்த வேண்டும். உடலின் வெப்பம் அதிகரித்து நீர்சத்து குறைவினால் பலவிதமாக நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரித்திட உடலின் நீரிழப்பிற்கேற்ப அதிக அளவு குடிநீர் பருக வேண்டும்.
பருவகாலத்திற்கேற்ற பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். கருவுற்ற பெண்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய பாதிப்பு உள்ளவர்கள் மூத்த குடிமக்கள் ஆகியோரின் குடும்பத்தினர் இந்த கடும்வெயில் காலத்தில் அவர்களின் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
தீ தடுப்பு நடவடிக்கைகள்:
அதிக வெப்பத்தின் காரணமாக கூரை வீடுகளில் உள்ள மின் கம்பிகள் உருகி குறுக்குச்சுற்று (Short circuit) ஏற்பட்டு வீட்டின் கூரைகள் எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. விறகு, பனைஓலை ஆகியவற்றை எரிபொருளாக பயன்படுத்தும் போது கோடை வெப்பத்தின் காரணமாக நெருப்பானது மற்ற இடங்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது. எனவே இவற்றை பயன்படுத்திய பிறகு முற்றிலுமாக தண்ணீர் விட்டு அனைத்துவிட வேண்டும். மேலும் காய்ந்த புற்கள், புதர்கள் உள்ள இடங்களில் தீ பிடிக்க வாய்ப்புள்ளதால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தீ பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையை 101 எண்ணில் அழைக்க வேண்டும்.
குழந்தைகள் பராமரிப்பு:
மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெயில் நேரங்களில் வாகனங்களில் குழந்தைகளை தனியே அமர்த்திவிட்டு வெளியே செல்லக்கூடாது. வெளியில் விளையாட செல்லும் குழந்தைகளை முறையாக கண்காணிக்க வேண்டும். அதிக வெயில் நேரங்களில் குழந்தைகளை வெளியே அனுப்புவதை தவிர்க்க வேண்டும். வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தால் வெப்பத்தை தணிக்க ஈரமான துணியினால் கழுத்து மற்றும் கைகளில் துடைக்க வேண்டும் மற்றும் குளிர்ந்த நீரில் குளிக்க வைக்க வேண்டும்.
முதியோர் பராமரிப்பு:
தனியே வசிக்கும் முதியவர்களுக்கு அருகே அவசர தொடர்புக்கு தொலைபேசி வசதி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். முதியவர்களின் உடல்நிலையை தினமும் இருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். முதியவர்கள் போதிய இடை வேளையில் நீர் அருந்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பொது அறிவுறுத்தல்:
கோடை வெயில் பாதிப்பை தவிர்க்க முன்னெச்சரிக்கை தேவை. கோடை கால நோய் பாதிப்புகள் தொடர்பான சந்தேகங்களுக்கு மருத்துவ ஆலோசனை எண்-104-ஐ தொடர்பு கொள்ளலாம்.
குடிநீர் பற்றாக்குறையை தவிர்க்க எடுக்கப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகளால் வட்டத்தில் எங்கும் பெரிய அளவில் எவ்வித குடிநீர் பிரச்சனையும் வராமல் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அனைத்து உள்ளாட்சிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் ஆகியோரின் வாராந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டரால் நடத்தப்பட்டு வருகிறது. குடிநீர் தொடர்பான புகார்கள் ஏதுமிருப்பின் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் "வணக்கம் நெல்லை" கட்டுப்பாட்டு அறைக்கு 9786566111 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
எனவே கோடை காலம் முடியும் வரை பொதுமக்கள் மேற்காணும் வழிமுறைகளை பின்பற்றி கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.