கவின் ஆணவப்படுகொலை வழக்கில் சுர்ஜித் தாயார் கைது - திருமாவளவன் பாராட்டு

10 மாதங்களுக்கு பின்னர் கொலையாளி சுர்ஜித்தின் தாயார் கிருஷ்ணகுமாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
திருமாவளவன்
Published on

சென்னை,

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் கவின் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவரை பாளையங்கோட்டை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். சுர்ஜித்தின் பெற்றோர்களான தமிழ்நாடு சிறப்பு காவல்படை சார்பு ஆய்வாளர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

பின்னர் சரவணன், உறவினர் ஜெயபால் மற்றும் வழக்கில் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டனர். சுர்ஜித்தின் தந்தை சரவணன் உள்ளிட்டோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. மேலும், சிபிசிஐடி போலீசார் இவ்வழக்கின் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, கொலை நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித்தின் தாயார் கிருஷ்ணகுமாரி நேற்று கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்த நிலையிலும், குற்றப்பத்திரிகையில் சுர்ஜித்தின் தாயான எஸ்.ஐ. கிருஷ்ணகுமாரி பெயர் சேர்க்கப்பட்டிருந்த நிலையிலும், சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாராட்டுக்கள்

இந்நிலையில் இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் தமிழக அரசுக்கு பராட்டுக்களை தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

நெல்லை மாவட்டத்தில் மென்பொறியாளர் கவின் ஆணவப்படுகொலை வழக்கில் விடுதலைச் சிறுத்தைகளின் தொடர் முயற்சியால் 10 மாதங்களுக்கு பின்னர் கொலையாளி சுர்ஜித்தின் தாயார் கிருஷ்ணகுமாரி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் நேர்மையான நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com