வடலூர் சத்தியஞான சபையில்7 திரைகளை விலக்கி தைப்பூச ஜோதி தரிசனம்லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

வடலூரில் ராமலிங்க அடிகளார் நிறுவிய சத்தியஞான சபையில் தைப்பூச திருநாளை முன்னிட்டு 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வடலூர் சத்தியஞான சபையில்7 திரைகளை விலக்கி தைப்பூச ஜோதி தரிசனம்லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
Published on

வடலூர், 

இறைவன் ஜோதி வடிவானவன் என்பதை உலகுக்கு உணர்த்திய ராமலிங்க அடிகளார், கடலூர் மாவட்டம் வடலூரில் சத்தியஞான சபையை நிறுவினார். மனிதனின் அகத்தில் உள்ள காமம், கோபம், லோகம், மோகம், மதம், மாச்சரியம் உள்ளிட்ட 7 வகை தீய குணங்களும் விலகினால் அருட்பெருஞ்ஜோதியான ஆண்டவனை காணலாம் என்பதே வள்ளலாரின் உபதேசம்.

இதை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் சத்திய ஞான சபையின் மையப் பகுதியில் நிலைக் கண்ணாடிக்குள் இருக்கும் ஜோதியை மறைத்து 7 வண்ணத் திரைகள் போடப்பட்டுள்ளன.

மாதந்தோறும் பூச நட்சத்திரத்தன்று 6 திரைகள் மட்டும் விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். ஆனால் தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தன்று 7 திரைகளையும் விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.

கொடியேற்றம்

அந்த வகையில் 152-வது ஆண்டு தைப்பூச விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதன் தொடக்கமாக கடந்த 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தருமச்சாலையில் மகாமந்திரம் ஓதப்பட்டது.

பின்னர் 31-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை ஞான சபையில் அருட்பா முற்றோதல் நடைபெற்றது. இதை தொடர்ந்து, ஞானசபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஜோதி தரிசனம்

இதைத் தொடர்ந்து நேற்று ஜோதி தரிசனம் நடைபெற்றது. முதல் ஜோதி தரிசனம் காலை 6 மணிக்கு காண்பிக்கப்பட்டது. அதன்பின்னர் காலை 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, இன்று(திங்கட்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு என்று மொத்தம் 6 காலம் 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது.

முன்னதாக ஜோதி தரிசனத்தை காண்பதற்காக சத்திய ஞான சபையின் இடது பக்கமும், முன்பகுதியிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். காலை 5.55 மணிக்கு ஜோதி தரிசன அறை கதவுகளுக்கும், சபையின் அருகில் உள்ள சிற்சபை மற்றும் பொற்சபை மண்டபங்களுக்கும் தீபாராதனை நடைபெற்றது. சரியாக 6 மணிக்கு சத்திய ஞான சபையின் மையப் பகுதி நிலைக் கண்ணாடியின் முன்புள்ள 7 வண்ணத் திரைகளை ஒன்றன்பின் ஒன்றாக விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.

அப்போது அங்கே திரண்டு நின்ற பக்தர்கள் வரிசையில் சென்று அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி என்ற அகவலை பக்தி பரவசத்துடன் கூறியபடி தரிசனம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து காலை 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி என 5 காலங்களில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதை லட்சக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.

அங்குள்ள தரும சாலை மேடையில் மாவட்ட அறநிலையத்துறையின்அதி காரிகள் முன்னிலையில் சன்மார்க்க அறிஞர்கள் உரையாற்றினார்கள்.

அதேபோன்று, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என்று பலரும் தரிசனம் செய்தனர்.

கருத்தரங்கம்

விழாவையொட்டி காலை 11 மணிக்கு தரும சாலை பிரசங்க மேடையில் சன்மார்க்க கருத்தரங்கம் நடைபெற்றது. அதேபோல் சத்திய ஞான சபை மேடையில் வில்லிசை, வரலாற்று நாடகங்கள் மற்றும் நாட்டியம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ஜோதி தரிசனத்தை காண்பதற்காக வடலூரில் நேற்று 2 லட்சத்துக்கும் அதிகமான சன்மார்க்க அன்பர்கள், பொதுமக்கள் திரண்டிருந்தனர். முன்னதாக டி.ஐ.ஜி. பாண்டியன் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், போலீசார் என்று 900-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

60 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், 10 இடங்களில் உயர்கோபுர மேடை அமைத்தும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வநிலையம், உதவி ஆணையர் சந்திரன், செயல்அலுவலர் ராஜாசரவணக்குமார் மற்றும் பார்வதிபுரம், மேட்டுக்குப்பம், கருங்குழி, மருதூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.

திருஅறை தரிசனம்

விழாவில் நாளை (செவ்வாய்க்கிழமை) வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகையில் பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை திருஅறை தரிசனம் நடக்கிறது.

முன்னதாக சத்திய ஞான சபை வளாகத்தில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டி (பேழை) பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.

இந்த ஊர்வலம் வள்ளலார் நடந்து சென்ற பார்வதிபுரம், நயினார் குப்பம், கருங்குழி, தீஞ்சுவை நீரோடை வழியாக கொண்டுவரப்பட்டு, வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாக திரு மாளிகையை சென்றடைந்து, பின்னர் மீண்டும் சத்திய ஞான சபையை வந்தடையும்.

அப்போது வழி நெடுகிலும் பொதுமக்கள் திரண்டு வரவேற்பு அளித்து வழியனுப்புவார்கள். இதற்கான ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வநிலையை செயல் அதிகாரி மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com