அரசு அலுவலகங்களில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

அரசு அலுவலகங்களில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
Published on

தர்மபுரியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

தீண்டாமை ஒழிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் அந்தந்த அரசு அதிகாரிகள் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு தீண்டாமைக்கு எதிராக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். இதில் கலெக்டர் தீண்டாமை உறுதிமொழி வாசிக்க அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தீண்டாமைக்கு எதிராக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் தீபனாவிஸ்வேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி, மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் ராஜசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம்

இதேபோன்று தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமை தாங்கினார். இதில் போலீஸ் சூப்பிரண்டு தீண்டாமை உறுதிமொழி வாசிக்க அதனை தொடர்ந்து காவலர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அண்ணாமலை, இளங்கோவன், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பாருக் மற்றும் அமைச்சு பணியாளர்கள், காவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com