

சென்னை,
தமிழக சட்டசபையில் பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 3-வது நாளாக நேற்று நடைபெற்றது. சட்டசபை கூட்டம் தொடங்கியதும் முன்னாள் முதல்-அமைச்சரும் தி.மு.க.எம்.எல்.ஏ.வுமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
ஐந்தாண்டுகளாக நாங்கள் 'டென்ஷனாக' இருந்தோம். நீங்கள் 'ரிலாக்ஸ்' ஆக இருக்கிறீர்கள். கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது நாளிதழ்களை படித்து அதிகாலையிலேயே எங்களை அழைத்து கேள்வி கேட்பார்” என்று கூறினார்.
தற்கு பதிலளித்த அமைச்சர் ஆனந்த், “அதற்குதான் நாங்கள் டென்ஷனாக இருப்போம் என சொன்னேன். பயமுறுத்தும் விதமாக அதை சொல்லவில்லை. தலைவர் எப்போது நம்முடன் பேசுவார் என எங்கள் உறுப்பினர்கள் நினைத்திருந்தார்கள். இப்போது செல்போன் அழைப்பு அவரிடம் இருந்து வந்தாலே பயம் இருக்கிறது. ஏதாவது தொகுதியில் சின்ன விஷயமாக இருந்தாலும் அதை ஏன் செய்ய வில்லை என்று கேட்கக்கூடியவர் எங்கள் முதல்-அமைச்சர்” என்று கூறினார்.
தொடர்ந்து கோவில்பட்டி பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுத்து பேசிய வழக்கில் கைதான தி.மு.க. எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் சட்டசபையில் பேசியபோது, 'நான் கரிசல் காட்டு மண்ணை சேர்ந்தவன். உணர்ச்சி வேகத்தில் பேசி விட்டேன். முதல்-அமைச்சரை காயப்படுத்தும் நோக்கம் இல்லை. மறந்து விடுங்கள்” என்று கூறினார்.
இதனிடையே நிதியமைச்சர் மரிய வில்சன் பேசுவதை, தி.மு.க. எம்.எல்.ஏ., ராஜேந்திரன் விமர்சித்தார். இதனால் கோபமடைந்த மரிய வில்சன், நான் தமிழ் பேசுவதில் குறைபாடு இருக்கலாம். அதற்காக என்னை கேலி செய்வது சரியல்ல. நான் இப்படித்தான் பேசுவேன். இது என் ஸ்டைல் என ஆவேசமாக பதிலளித்தார். இதற்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதிலடி தராமல் மவுனமாகி விட்டனர்.
அதேநேரத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் வேலு, என் அண்ணனோட மாப்பிள்ளை மரிய வில்சன் என நிதியமைச்சருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சட்டசபையில் பேசினார். இந்த தகவல்கள் தெரிந்ததும், எம்.எல்.ஏ.க்கள் சிலரை, தி.மு.க. தலைமை அலுவலகமான அறிவாலயத்திற்கு அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அழைத்ததாக கூறப்படுகிறது.
அப்போது, சட்டசபை கூட்டத்தொடரில், சம்பந்தப்பட்ட துறை, விவாதிக்கப்படும் விஷயங்களை பற்றி மட்டும் பேசுங்கள். சப்ஜெக்டை விட்டுவிட்டு வேறு எதுவும் தேவையின்றி பேசாதீர்கள் என கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் சட்டசபையில், த.வெ.க. அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோரை உறவுமுறையை சுட்டிக்காட்டி பேசினார்.
இது குறித்து, தி.மு.க., முன்னாள் எம்.பி., செந்தில்குமார் தனது எக்ஸ் வலைதளத்தில், 'தி.மு.க., தொண்டர்கள் தொடங்கி, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வரை கைது செய்து, கழக தொண்டர்களின் உணர்ச்சியை தூண்டும் வகையில் ஆக்ரோஷ அரசியலை கையில் எடுத்துள்ள விஜய் அரசை, நமது MLAகள், ஆளும் கட்சி அமைச்சர்களை உறவு வைத்து சட்டமன்றத்தில் பேசுவதை தவிர்க்க வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.