

சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் வழக்காடு மொழியாக தமிழ் வேண்டும் எனக்கோரி சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் விஜய் தனித் தீர்மானம் கொண்டு வருகிறார்.
தமிழக சட்டசபையில் கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 6-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 7, 10,11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதமும், 12-ந் தேதி நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோரின் பதில் உரையும் இடம் பெற்றது.
கடந்த மாதம் 17-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சட்டசபையில் வினாக்கள்- விடைகள் நேரம் இன்று (வியாழக்கிழமை) முடிந்தவுடன் முதல்-அமைச்சர் விஜய் அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வருகிறார்.
அதில், தமிழை சென்னை ஐகோர்ட்டின் முதன்மையான நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்க வேண்டும். தமிழில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள், ஆவணங்கள் மற்றும் வாதங்களுக்கு உரிய நடைமுறையை உருவாக்க வேண்டும்.
ஐகோர்ட்டில் வழங்கப்படும் தீர்ப்புரைகள், தீர்ப்பாணைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தும் தமிழில் வழங்கும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பது உள்பட அம்சங்களுடன் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானத்தை முன்மொழிகிறார்.
முதல்-அமைச்சர் கொண்டு வரும் இந்த தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசுவார்கள். அதன்பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சட்டமன்றத்தில் ஏற்கனவே 6.12.2006 அன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத் திய அரசுக்கு அனுப்பப்பட்டது நினைவுக்கூரத்தக்கது.
அதனை தொடர்ந்து சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் வசமுள்ள காவல் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை), தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. சட்டசபையில் அமைச்சர்கள் பதிலுரைக்கு முன்பாக அறிவிப்புகளை வெளியிடும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.
அந்த வகையில் முதல்-அமைச்சர் விஜய் முதலில் துறைசார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படு கிறது. அதன்பின்னர் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அந்தந்த கட்சி தலைவர்கள் வரிசையாக இன்று பேசுவார்கள். அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) தனது பதிலுரையை வழங்குவார்.