

சென்னை,
தமிழக பட்ஜெட்டில் அரசின் முக்கிய துறைகளுக்கான நிதியை குறைத்தது ஏன் என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார் இது தொடர்பாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:- பட்ஜெட்டை குறைப்பது, தரத்தில் சமரசம் செய்வதற்கு சமம்!
ஜோசப் விஜய் தலைமையிலான அரசு தாக்கல் செய்துள்ள 2026- 2027 ஆண்டிற்கான பட்ஜெட்டில், தமிழகத்தின் மிக முக்கிய துறைகளுக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, அரசு இயந்திரத்தினை மழுங்கடிக்க செய்யும் முடிவாகும்.
கடந்த ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டில்,
- ரூ. 48,534 கோடியாக இருந்த பள்ளிக்கல்வி துறைக்கான நிதி, இந்த ஆண்டு ரூ. 44,527 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
- உயர்கல்வித் துறைக்கான நிதி ரூ. 8,505 கோடியில் இருந்து ரூ. 8,393 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
- நீர்வளத்துறைக்கான நிதி ரூ. 10,076 கோடியில் இருந்து ரூ. 9,264 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
- எரிசக்தி துறைக்கான நிதி ரூ. 18,091 கோடியில் இருந்து ரூ. 15,828 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
- கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறைக்கான நிதி ரூ. 1,943 கோடியில் இருந்து ரூ. 1,678 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இப்படி முக்கியமான துறைகளுக்கெல்லாம் நிதி ஒதுக்கீட்டை குறைத்த தவெக அரசு, தமிழகத்தின் கடன் மட்டும் ரூ.1.22 லட்சம் கோடியிலிருந்து ரூ.1.73 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக கணக்கு காட்டுவது பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறது.
எனவே, அரசின் முக்கிய துறைகளுக்கான நிதிகளை குறைத்தது ஏன்? இதனால் உண்டாகும் பாதிப்புகளை எதிர்கொள்ள அரசு என்ன மாதிரியான செயல்திட்டங்களை வைத்துள்ளது? செலவினங்கள் குறைவாக இருக்கும் பட்சத்தில், கடன் தேவை மட்டும் அதிகரிக்க காரணம் என்ன? "பணக் கசிவு "- ஐ சரி செய்கிறோம் என்ற பேர்வழியில், "மக்கள் நலன்"-இல் அரசு சமரசம் செய்கிறதா? உள்ளிட்ட மக்களின் சந்தேகங்களுக்கு முதல்அமைச்சர் ஜோசப் விஜய் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களும் உடனடியாக மக்கள் மன்றத்தில் பதிலளிக்க வேண்டும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.