'தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளது' - முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு

வாக்களித்த மக்களுக்கு எந்த தேர்தல் வாக்குறுதியையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை என ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
'தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளது' - முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு
Published on

சென்னை,

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

"தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு தனியார் வேலை வாய்ப்பு மூலம் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறினார்கள். தற்பொழுது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் பயிற்சி நிறுவனங்கள், பொறியியல் பட்டய மற்றும் பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆண்டு தோறும் 8 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று வெளியே வருகின்றனர். சுமார் 2 லட்சம் பேர் கல்வி நிலையங்களில் தேர்ச்சி பெறுவதில்லை.

ஆக மொத்தம் 10 லட்சம் பேர் ஒவ்வொரு ஆண்டும் கல்லூரிகளில் இருந்து வெளியேறி வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். இது குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை. வாக்களித்த மக்களுக்கு எந்த தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றாத தி.மு.க. அரசு, ஆண்டுக்கு ரூ.45-50 ஆயிரம் கோடி அளவுக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்து வெற்றி கரமாக நிறைவேற்றி உள்ளது. இப்படியே சென்றால் 5 ஆண்டுகள் தி.மு.க. ஆட்சியின் முடிவில் மது விற்பனை பல கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்து தமிழகத்தில் உள்ள இளைஞர்களின் எதிர்காலம் சீரழித்து விடும்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் இளைய சமுதாயத்திற்கு பல்வேறு திட்டங்களை செய்துள்ளார். ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், 7 புதிய கல்லூரிகள், 21 பல்வகை தொழில்நுட்ப கல்லூரிகள், நான்கு பொறியியல் கல்லூரிகள், 1,102 ஏக்கரில் ஆசியாவில் மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி பூங்கா, 40 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 248 தொடக்கப் பள்ளிகள் தொடக்கம், 117 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்வு, 1079 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம்உயர்வு, 604 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகள் தரம் உயர்வு, 52 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி திட்டம், மேலும் 13 லட்சம் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டம், கறவை மாடு ஆடுகள் திட்டம், பசுமை வீடு திட்டம், ஒரு கோடியே 87 லட்சம் குடும்பங்களுக்கு விலை யில்லா மிக்ஸி, கிரைண்டர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் பட்டது. ஆனால் தமிழகத்தின் கடன் சுமை உயரவில்லை. ஆனால் தற்போது எந்த திட்டமும் செய்யாமல் தமிழகத்தின் கடன் சுமை இந்தியாவிலேயே முதல் இடத்தில் அதிகரித்துள்ளது."

இவ்வாறு ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com