

சென்னை,
தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட கனிமத்துடன் அதிக மதிப்புள்ள வேறு கனிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டால், அதற்கான கூடுதல் கட்டணத்தை செலுத்தி அவற்றையும் விற்பனை செய்ய அனுமதி அளிக்கும் வகையில் இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் இயற்கை வளங்கள் துறை வெளியிட்டுள்ள அரசிதழ் அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்கு முறை) சட்டம், 1957-ன் கீழ் தமிழக சிறு கனிம சலுகை விதிகள், 1959-ல் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது. அதன்படி, கட்டிடம் மற்றும் சாலை அமைக்கும் பொருட்களுக்கான கற்கள் தொடர்பான பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இடம் பெற்றிருந்த 'கிரானைட் அல்லாத கற்கள்' என்ற வகைப்பாட்டுக்கு பதிலாக, இயற்கையாக சிதைந்த கருங்கல், கல் துண்டுகள், பெரிய பாறைக்கற்கள், உடைக்கப்பட்ட மற்றும் நொறுக்கப்பட்ட கற்கள், மெட்டல் ஜல்லி, சாலை அமைப்பதற்கான கற்கள் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளன.
சுரங்க குத்தகைதாரர் ஒருவர் தனது அனுமதிக்கப்பட்ட சுரங்க பகுதியில் கிடைக்கும் இயற்கையாக சிதைந்த கருங்கல்லை விற்பனை செய்ய விரும்பினால், அதுகுறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அந்த கல்லில் என்னென்ன கனிமங்கள் உள்ளன என்பதை கண்டறிய புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குனரகத்தின் ஆய்வகத்தில் மாதிரி பரிசோதனை செய்யப்பட வேண்டும். அந்த ஆய்வில் அதிக மதிப்புள்ள கனிமங்கள் இருப்பது கண் டறியப்பட்டால், சட்டம் மற்றும் விதிகளின்படி அந்த கனிமங்களை விற்பனை செய்ய வேண்டும்.
அதேபோன்று, அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட வேறு கனிமங்கள் அந்தக் கல்லில் இருப்பது கண்டறியப்பட்டால், அவற்றுக்கான கூடுதல் கட்டணத்தை செலுத்திய பின்னர், இயற்கையாக சிதைந்த கருங்கல்லாகவே அதனை விற்பனை செய்ய வும் அனுமதி வழங்கப்படும். இதற்கான திருத்தத்தை தமிழக அரசு கடந்த ஜூலை 23-ந் தேதி அமல்படுத்தி அரசிதழில் வெளியிட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.