பாம்பு கடியை அறிவிக்கக்கூடிய நோயாக அறிவித்தது தமிழக அரசு

பாம்பு கடி தொடர்பான தரவுகளை ஆராய்ந்து பாம்பு கடிக்கு சிகிச்சை அளிப்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை இதன் மூலம் மேம்படுத்த முடியும்.
பாம்பு கடியை அறிவிக்கக்கூடிய நோயாக அறிவித்தது தமிழக அரசு
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு பொதுசுகாதாரச் சட்டம் 1939-ன் கீழ், தமிழ்நாடு அரசு பாம்பு கடியை "அறிவிக்கை செய்யக்கூடிய நோயாக" தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையால் நவம்பர் 4, 2024 அன்று அரசாணை வெளியிடப்பட்ட பிறகு, இதற்கான அறிவிப்பை 6 நவம்பர் 2024 அன்று தமிழ்நாடு அரசால் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

பாம்பு கடி விஷம் என்பது உயிருக்கு ஆபத்தான ஒரு தீவிர மருத்துவ நிலை. இது வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல நாடுகளில் உள்ள கிராமப்புற மக்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் ஒரு தடுக்கக்கூடிய பொது சுகாதார நிலை. உலக சுகாதார அமைப்பு பாம்பு கடியால் ஏற்படும் இறப்புகள் மற்றும் குறைபாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய உத்தியை அறிமுகப்படுத்தியுள்ளது.

சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட பாம்பு கடி விஷத்தை தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயல் திட்டம் ஒரு சுகாதார அணுகுமுறை மூலம் 2030-ம் ஆண்டுக்குள் பாம்பு கடி இறப்புகளை பாதியாகக் குறைப்பதற்கான வரைபடத்தை உருவாக்கி உள்ளது. பாம்பு கடியால் அதிக பாதிப்பும் மற்றும் இறப்பும் ஏற்படுகிறது, விவசாயத் தொழிலாளர்கள், குழந்தைகள் மற்றும் பாம்புகள் அதிகம் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

பாம்பு கடியை "அறிவிக்கை செய்யக் கூடிய நோயாக" மாற்றுவதன் மூலம், தரவு சேகரிப்பு, மருத்துவ உட்கட்டமைப்பு மற்றும் பாம்பு கடியால் இறப்பதைத் தடுப்பதற்கான விஷமுறிவு மருந்து வழங்குவதன் மூலம் சிகிச்சை மேம்படுத்தப்படும். ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளம் - ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் பாம்பு கடி மற்றும் பாம்பு கடியால் ஏற்படும் இறப்பு தொடர்பான அறிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுவரை பாம்பு கடி மற்றும் பாம்பு கடியால் ஏற்படும் இறப்பின் எண்ணிக்கையிலும், தரவுகளின் எண்ணிக்கையிலும் வேறுபாடு உள்ளது.

பாம்பு கடி பற்றிய அறிவிப்பு அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் அரசுக்குத் தரவைத் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாக்குகிறது. இது, தமிழ்நாட்டில் பாம்பு கடிக்கான விரிவான தடுப்பு மற்றும் சிகிச்சை உத்திகளுக்குப் பயன்படுத்தக்கூடிய சிறந்த தரவு சேகரிப்புக்கு வழிவகுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com